சட்டப்பேரவையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித் தீர்மானத்திற்கு திமுக, அதிமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
சட்டப்பேரவையில், மேகதாது அணை விவகாரம் தொடர்பான தனி தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசிய காங்கிரஸ் உறுப்பினர் ராஜேஷ்குமார், முதலமைச்சர் முன்மொழிந்துள்ள அரசினர் தீர்மானத்தை காங்கிரஸ் கட்சி முழு மனதோடு ஆதரிப்பதாக தெரிவித்தார்.
காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மதிக்காமல் கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட முயற்சிப்பது கண்டிக்கத்தது என்றும், தமிழகத்திற்கு ஆண்டுதோறும் வழங்க வேண்டிய நீரை முறைப்படி வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். மேலும், மேகதாது அணை கட்டப்பட்டால் காவிரி டெல்டா விவசாயிகளின் எதிர்காலமே கேள்விக்குறியாகும் என ராஜேஷ்குமார் தெரிவித்தார்
இதனை தொடர்ந்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினரும், அமைச்சருமான வன்னி அரசு, தமிழ்நாட்டின் உரிமை என்ற அடிப்படையில் முதலமைச்சர் கொண்டு வந்துள்ள தீர்மானம், வரலாற்று சிறப்புமிக்க முன்மொழிவு என தெரிவித்தார். மேலும், தமிழர் உரிமை காக்கும் தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு விசிக என்றைக்கும் உடன் நிற்கும் என கூறினார்.
முதலமைச்சரின் தனி தீர்மானத்தை ஆதரித்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ராஜேந்திரன், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணையை கட்டியேத் தீருவோம் என்ற கர்நாடக அரசின் நடவடிக்கை கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என தெரிவித்தார். மேலும், தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி கருத்துக்களை கேட்டறிந்து பிரதமர், நீர்வள அமைச்சரை சந்தித்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதனை அடுத்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் செல்லசுவாமி, மேகதாது அணைக்கு எதிரான தனித் தீர்மானத்திற்கு சிபிஎம் கட்சி ஆதரவு அளிக்கிறது என தெரிவித்தார். மேலும், நீதிமன்ற தீர்ப்பை ஏற்காமல் கர்நாடக அரசின் அணைக் கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
















