திருவள்ளூர் மாவட்டம், கன்னிகைப்பேர் பகுதியில் அமோனியா வாயு கசிவால் 5 ng;u உயிரிழந்த சம்பவத்துக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, திருவள்ளூர் மாவட்டத்தில் அமோனியா கசிவு விபத்து உயிரிழப்புகளை கேட்டு மிகுந்த வேதனை அடைந்ததாக தெரிவித்துள்ளார்.
தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் என கூறியுள்ள பிரதமர் மோடி, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதே போல தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, திருவள்ளூர் மாவட்டத்தில் அமோனியா வாயு கசிவால் தொழிலாளர்கள் உயிரிழந்தது மிகுந்த அதிர்ச்சியை தருவதாக கூறியுள்ளார்.
இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ள உதயநிதி, மருத்துவமனையில் உள்ள தொழிலாளர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தொழிலாளர் நலனிலும், பாதுகாப்பிலும் எந்தவொரு சமரசத்திற்கும் அரசு இடம் கொடுக்கக் கூடாது என்றும் உதயநிதி குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திருவள்ளூர் மாவட்டத்தில் அமோனியா வாயு கசிந்து தொழிலாளர்கள் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ள இபிஎஸ்,
பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை காக்க உரிய மருத்துவ சிகிச்சைகள் அளிப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துவதாகவும் கூறியுள்ளார்.
மேலும், தொழிற்சாலைகளுக்கான பாதுகாப்பு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதை அரசு தொடர் ஆய்வுகள் மூலம் உறுதிசெய்திட வேண்டுமென கேட்டுக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
















