அத்தியாவசிய பொருட்களுக்கான தடையை நீக்கவில்லை எனில் உதவிக்காக இந்தியாவை நாடுவோம் என பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் நடத்தும் மக்கள் அறிவித்துள்ளனர்…
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 22 நாட்களாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விலைவாசி உயர்வு, பாகிஸ்தான் ராணுவ அடக்குமுறை, உணவுப் பொருட்கள் மற்றும் இணைய சேவை முடக்கம் உள்ளிட்டவற்றை கண்டித்து, இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ராவலகோட் ஈத்கா மைதானத்தில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள், ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்பது பாகிஸ்தானின் பகுதியே அல்ல என முழக்கம் எழுப்பினர். ஆக்கிரமிப்பு காஷ்மீர் இனி பாகிஸ்தானின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்காது எனவும், தங்களால் அசிம் முனீர் போன்ற ஒரு சர்வாதிகாரியை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்தனர். அத்தியாவசிய பொருட்களுக்கான தடையை நீக்கவில்லை எனில், உதவிக்காக இந்தியாவை நாடுவோம் என அறிவித்துள்ள அவர்கள், இந்தியாவை நாடுவது ஒட்டுமொத்த அரசியல் சூழலையும் மாற்றி பாகிஸ்தானுக்கு பெரும் நெருக்கடியை கொடுக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்…
















