மேற்காசியாவில் பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தை மூலமாகவே தீர்வு ஏற்படுத்த வேண்டும், ஹார்முஸ் ஜலசந்தியில் தடையற்ற கப்பல் போக்குவரத்து நடப்பதை உறுதி செய்ய வேண்டும் என ஈரான் அதிபர் மசூத் பெஜெஸ்கியானிடம் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.
மேற்காசிய நாடான ஈரானுடன் அமெரிக்கா தற்காலிக அமைதி ஒப்பந்தம் செய்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் தடையின்றி கப்பல் போக்குவரத்து தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கத்தாரில் பேச்சுவார்த்தை நடக்கிறது.
இந்நிலையில் ஈரான் அதிபர் மசூத் பெஜெஸ்கியான் உடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். அப்போது மேற்காசியா பிரச்னையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி குறித்து ஈரான் அதிபர், பிரதமர் மோடியிடம் விளக்கினார்.
மேற்காசிய விவகாரத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்திற்கு வரவேற்பு தெரிவித்த பிரதமர் மோடி, அனைத்து பிரச்னைகளுக்கும் பேச்சுவார்த்தை மற்றும் தூதரக ரீதியில் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை கூறினார்.
மேற்காசியாவில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு தொடர் முயற்சிகள் எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர் மோடி, தடையற்ற வர்த்தகம் மற்றும் கப்பல் போக்குவரத்து நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
















