அதிமுக சார்பில் இன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தாங்கள் பங்கேற்கப் போவதில்லை என முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.
முழுமையான விவசாயக் கடன் தள்ளுபடி மற்றும் மேகதாது அணை விவகாரங்களில் த.வெ.க. அரசை கண்டித்து இன்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அதில், அதிமுக சார்பில் இன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு முழு ஆதரவு அளிப்பதாக குறிப்பிட்டுள்ளனர். ஆனால், சொந்த மாவட்டங்களைத் தவிர்த்து வேறு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்ற உத்தரவை ஏற்க முடியாது என அவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
மாவட்டச் செயலாளர் பொறுப்பை மீண்டும் வழங்காததால் அதிருப்தியில் இருக்கும் எஸ்.பி.வேலுமணி தரப்பின் இந்த அறிவிப்பு அதிமுக நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
















