காஞ்சிபுரம் மாவட்டம் கெருகம்பாக்கம் ஊராட்சியில் கணக்கில் வராத 14 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தலைவர், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
குன்றத்தூர் அடுத்த கெருக்கம்பாக்கம் ஊராட்சியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு லஞ்சம் வாங்குவதாக வந்த தகவலையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் 2 நாட்களுக்கு முன்பு கெருகம்பாக்கம் ஊராட்சியில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கணக்கில் வராத 14 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கண்டுபிடிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்களிடம் விசாரணை மேற்கொண்டு பணத்தை பறிமுதல் செய்து அதிகாரிகள் எடுத்து சென்றனர்.
இதுதொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீஸ்வரி மீதும், அவர் அலுவலகத்தில் இருந்தவர்களில் முன்னுக்கு பின் முரணாக பேசிய தனியார் நிறுவன ஊழியர்கள் மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மூன்று குழுக்களாக பிரிந்து கெருகம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீஸ்வரி, துணைத் தலைவர் லைலா, வார்டு உறுப்பினர் சந்தோஷ் ஆகியோரது வீடுகளுக்கு சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
காலையில் தொடங்கிய சோதனை மாலை வரை நீடித்த நிலையில், இவர்களது வீடுகளில் இருந்து முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
















