தயாநிதி மாறனுக்கு எதிரான தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில், தொலைத்தொடர்புத் துறை செயலாளரை நீதிமன்ற சாட்சியாக ஆஜர்படுத்த உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
2004 முதல் 2007 வரை மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது, பி.எஸ்.என்.எல். அதிவிரைவு தொலைபேசி இணைப்புகளை வர்த்தக பயன்பாட்டுக்கு முறைகேடாக பயன்படுத்தியதாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கில் தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன் உள்ளிட்டோருக்கு எதிராக சென்னை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மத்திய தொலைத்தொடர்புத் துறை செயலாளரை நீதிமன்ற சாட்சியாக ஆஜர்படுத்தக் கோரி தயாநிதி மாறன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
இதை எதிர்த்து சி.பி.ஐ. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், செயலாளரை சாட்சியாக ஆஜர்படுத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தொலைத்தொடர்புத் துறை செயலாளரை நீதிமன்ற சாட்சியாக அழைப்பதற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
















