பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் பின்னணியில் பாகிஸ்தானின் பைசல் வங்கி இருப்பது NIA விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கொடூரமான பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் என்ற துயரைச் சம்பவம் நடந்து ஓராண்டு ஆகிவிட்டது. பதிலடியாக இந்தியா ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் வெற்றிக்குப் பின்னும் பாகிஸ்தானின் எல்லைதாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் மேலும் தீவிரமாக்கப் பட்டுள்ளன.
தசிகாம் காடுகளில் பதுங்கி இருந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட பைசல் ஜாட், ஹபீப் தாஹிர் மற்றும் ஹம்சா ஆப்கானி ஆகிய மூன்று லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகளும் கடந்த ஜூலை 28ம் தேதி, ஆப்ரேஷன் மகாதேவ் நடவடிக்கையில் கொல்லப்பட்டனர்.
மூன்று பயங்கரவாதிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சீன நிறுவனமான Xiaomi Redmi 9Tமற்றும் Redmi Note 12 ஆகிய இரண்டு ஸ்மார்ட் போன்களை NIA மற்றும் காஷ்மீர் காவல் துறை ஆய்வு செய்தனர்.
இதில் 2021ஆம் ஆண்டில் Redmi 9T ஸ்மார்ட் போன் பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள ‘டெக் சிராத்’ நிறுவனத்துக்கு இறக்குமதி செய்யப்பட்டது கண்டறியப் பட்டுள்ளது.
அதே போல் பயங்கரவாதிகள் பயன்படுத்திய Redmi Note 12 போன், லாகூரைச் சேர்ந்த ஏர் லிங்க் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தால் 2023ல் இறக்குமதி செய்யப்பட்டது என்று புலனாய்வில் தெரியவந்துள்ளது.
செல்லுலார் நெட்வொர்க்குகளுக்குப் பதிலாக நீண்ட தூர ரேடியோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதால் பயங்கரவாதிகளின் தகவல் பரிமாற்றங்களை மீட்க முடியவில்லை என்றாலும் அந்தப் போன்களிலிருந்து தாக்குதலுக்காகப் பயன்படுத்தப்பட்ட பல புகைப்படங்கள் மற்றும் ரகசிய வரைபடங்களைப் புலனாய்வு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
குறிப்பாக 2025ஆம் ஆண்டு மார்ச் 30 ஆம் தேதி பைசரன் பள்ளத்தாக்கு அருகே அமைக்கப்பட்டிருந்த தங்குமிடம் குறித்த புகைப்படம் ஒன்றும் கிடைத்துள்ளது.
இதன் மூலம், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பல வாரங்களுக்கு முன்பேபயங்கரவாதிகள் அந்தப் பகுதியில் தீவிர உளவுப் பணிகளில் ஈடுபட்டிருந்தது உறுதி செய்யப் பட்டுள்ளது.
குறிப்பிட்ட இந்தப் போன்களை இறக்குமதி செய்வதற்குக் கராச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பாகிஸ்தானின் முன்னணி இஸ்லாமிய வங்கியான Faysal Islamic Bank நிதியுதவி செய்துள்ளது தெரியவந்துள்ளது.
Faysal Islamic Bank என்பது சவுதி அரேபியாவின் மறைந்த மன்னர் ஃபைசலின் மகனான முகமது பின் ஃபைசல் அல் சவுத் என்பவருக்குச் சொந்தமான, பஹ்ரைனைத் தலைமையகமாகக் கொண்ட வங்கியாகும்.
பாகிஸ்தான் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள இந்த வங்கிக்குப் பாகிஸ்தான் முழுவதும் 360-க்கும் மேற்பட்ட நகரங்களில் கிளைகள் உள்ளன.
பயங்கரவாதப் பயன்பாட்டிற்காகவே இந்த போன்கள் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்புக்கு க் கடத்தப்பட்டிருக்கலாம் என புலனாய்வு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஏற்கெனவே அமெரிக்காவின் செப்டம்பர் 11 பயங்கரவாத தாக்குதல் மற்றும் பல்வேறு அல்கொய்தா பயங்கரவாத தாக்குதல்களின் பின்னணியில் பாகிஸ்தான் பைசல் வங்கி இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
மேலும் அல்கொய்தாவுடன் தொடர்புடைய லஜ்னத்-அல்-தவா மற்றும் லஷ்கர்-இ-தொய்பா போன்ற தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் கணக்குகள் இவ்வங்கியில் பராமரிக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப் பட்டுள்ளது.
லஷ்கர்-இ-தொய்பா மற்றும் அதன் நிழல் அமைப்பான TRF சதி திட்டம் தீட்டியதாகவும் சாஜித் ஜாட் மூலம் ஒருங்கிணைத்ததாகவும் குற்றப் பத்திரிகையில் கூறியுள்ள NIA, இவரே பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட தொலைபேசிகளைப் பயன்படுத்தி பயங்கரவாதிகளின் நடமாட்டம், இலக்கு வைத்தல், ட்ரோன் மூலம் ஆயுதங்களை வீசுதல், ஆயுத விநியோகம் மற்றும் தகவல் தொடர்புகளை நிர்வகித்ததாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பட்டாகிராமில் இருந்து காஷ்மீர் ஃபைட்’ என்ற டெலிகிராம் சேனல் இயக்கப்பட்டு வந்ததாகவும்,அந்த சேனலிலேயே தாக்குதலுக்குத் தீவிரவாதிகள் பொறுப்பேற்றதாகவும் புலனாய்வு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான NIA யின் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
















