தவெகவில் புதியதாக இணையும் மாற்றுக்கட்சியினருக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் ஏற்கனவே உள்ள நிர்வாகிகளுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் உட்கட்சி பூசல் தவெகவை நம்பி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த 4 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
தமிழகத்தில் அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம், திமுக கூட்டணியில் தேர்தலை சந்தித்து வெற்றிபெற்ற காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட்கள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது. சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பாக கட்சியில் இணைந்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கிய போதே எழுந்த எதிர்ப்புக் குரல் தற்போது அதிமுகவினர் இணையும் போது வலுக்கத் தொடங்கியுள்ளது.
மாற்றுக் கட்சியில் இருந்து வந்த 106 பேருக்கு கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டதால் தவெகவைச் சேர்ந்த 62 மாவட்டச் செயலாளர்கள் உட்பட விஜய் மக்கள் இயக்கத்திலிருந்து உழைத்தவர்களுக்கு வாய்ப்பில்லாத சூழல் நிலவியது. அதோடு தேர்தலில் வெற்றி பெற்றபின் மாற்றுக்கட்சியில் இருந்து வந்தவர்களில் 7 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டதும் தவெகவுக்குள்ளான உட்கட்சி பூசலை வலுப்படுத்த, தற்போது அதிமுகவில் இருந்து சாரை சாரையாக வரும் நிர்வாகிகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் பெரிய பூதாகரத்தை உண்டாக்கியுள்ளது.
தேர்தலில் போட்டியிடாதவர்கள் ஒருபுறமும், தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் அமைச்சர் பதவி கேட்டு மறுபுறமும் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு கடும் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நான்கு MLA-க்கள் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தது பெரும் புகைச்சலை கிளப்பியுள்ளது. மீண்டும் தவெக சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்ற ஆதவ் அர்ஜுனாவின் பேச்சை நம்பி வந்த இந்த நான்கு பேரும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்க கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது
விஜய் ரசிகர் மன்ற காலத்திலிருந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து படிப்படியாக உழைத்து வரும் நிர்வாகிகளுக்கு மதிப்பளிக்காமல் மாற்றுக் கட்சியினருக்கு கொடுக்கும் முக்கியத்துவத்திற்கு வெளிப்படையாகவே சில நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கியுள்ளனர். புதியதாக வந்தவர்களுக்கு இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கினால் இப்பிரச்னை மேலும் கொழுந்து விட்டு எரியும் என்ற தகவலும் கட்சித் தலைமைக்கு சென்றுள்ளது. எனவே புதியதாக வந்தவர்களை சிறிது காலம் ஓரங்கட்டி வைத்துவிட்டு பழைய நிர்வாகிகளை அனுசரித்து அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் முடிவுக்கு தவெக தலைமை முன்வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
















