அமெரிக்கா, ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்ட போதிலும், மத்திய கிழக்கில் போர் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை மீண்டும் சிதறியுள்ளது. அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் பதிலுக்குப் பதில் தாக்கி வருவதால், வளைகுடா நாடுகளில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவுகிறது. அங்கு நடப்பது என்ன? விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்…
ஈரான், அமெரிக்கா போர் 3 மாதங்களுக்குப் பின் நிறுத்தப்பட்டு, ஹோர்முஸ் நீரிணையில் சர்வதேச கப்பல்கள் கடந்து செல்கின்றன. இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் வரத்து ஓரளவு இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது.
இந்தியாவை சேர்ந்த சரக்கு கப்பல்களும் கச்சா எண்ணெயுடன் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணித்து வரும் நிலையில், நம் நாட்டிலும் எரிபொருள் விநியோகம் விரைவில் சீராகும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த நிலையில், அந்த எதிர்பார்ப்பைத் தகர்க்கும் விதமாக மீண்டும் வளைகுடாவில் பதற்றம் அதிகரித்திருக்கிறது. ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் கிடங்குகள், கடலோர ரேடார் மையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதும், அதற்கு சில மணி நேரங்களிலேயே ஈரான் பதிலடி கொடுத்ததும்தான் இதற்கு காரணம்.
ஈரானின் புரட்சிகர காவல் படையானது, தனது கடற்படை மற்றும் விண்வெளிப் பிரிவுடன் இணைந்து, குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மீது ஒருங்கிணைந்த ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தியதாக அறிவித்துள்ளது.
குவைத்தில் உள்ள அலி அல் சலேம் விமானத் தளமும், பஹ்ரைனில் அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படை தளமாக செயல்படும் பகுதிகளும் தாக்குதலின் இலக்காக இருந்ததாக ஈரான் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்குப் பிறகு, பஹ்ரைனில் வான்வழி எச்சரிக்கை சைரன்கள் இடைவிடாமல் ஒலிக்கப்பட்டன.
குவைத் பாதுகாப்புப் படைகள், தங்கள் வான் பாதுகாப்பு அமைப்புகள் இரண்டு ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாக அறிவித்துள்ளன. முதல் கட்ட தகவலின்படி, அமெரிக்க ராணுவத்தினருக்கு உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும், பெரிய அளவிலான சேதமும் பதிவாகவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த தாக்குதலுக்கு பின்னர், கடும் எச்சரிக்கையையும் ஈரான் விடுத்துள்ளது. “அமெரிக்க ராணுவத் தளங்களுக்கு இனி நரகம்தான் காத்திருக்கிறது” என்று ஈரான் புரட்சிகர காவல் படை வெளிப்படையாக எச்சரித்துள்ளது. அதே நேரத்தில், அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தினால், தூதரக பேச்சுவார்த்தைகளே முற்றிலும் நிறுத்தப்படும் என்றும் ஈரான் அறிவித்துள்ளது.
மறுபுறம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டால், அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கை இன்னும் தீவிரமாகும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த மோதலால் வளைகுடா நாடுகள் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
எண்ணெய் கப்பல்கள் அதிகம் பயணிக்கும் ஹோர்முஸ் நீரிணை மீதான அச்சமும் மீண்டும் அதிகரித்துள்ளது. உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதைகளில் ஒன்றான இந்தப் பகுதி பதற்றத்தில் இருப்பதால், சர்வதேச பொருளாதாரத்திலும் தாக்கம் ஏற்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
அமெரிக்கா, ஈரான் போர் நிரந்தரமாக முடிவுக்கு வர வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்திக் கொண்டிருக்கும் நேரத்தில், அமெரிக்காவின் தாக்குதலும், அதற்கு ஈரானின் பதிலடியும் பதற்றத்தை இன்னமும் அதிகரித்திருக்கின்றன. ஏற்கெனவே போரால் ஏறத்தாழ 3 மாதங்கள் உலக நாடுகளில் கச்சா எண்ணெய் வரத்து பாதிக்கப்பட்டு, விலைவாசி உயர்ந்தது.
இந்தச் சூழலில், அமெரிக்கா, ஈரான் இடையிலான இந்த மோதல் இரு நாடுகளுக்குள் மட்டும் இருக்குமா? அல்லது, ஒட்டுமொத்த வளைகுடா பிராந்தியத்தையும் பாதிக்குமா? என்பதே உலக நாடுகளின் மிகப்பெரிய கவலையாக மாறியுள்ளது.
















