சென்னையைச் சேர்ந்த இ-பிளேன் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் மின்சாரத்தில் இயங்கும் விமானத்தை வடிவமைக்கும் பணியில் முனைப்புடன் ஈடுபட்டு வருகிறது. வரும் 2027-இல் சோதனை ஓட்டம் நடத்தி, அதற்கு அடுத்த ஆண்டில் எலக்ட்ரிக் விமானத்தை நடைமுறைக்கு கொண்டுவரும் அந்நிறுவனத்தின் இலக்கை விரிவாக பார்க்கலாம்…
சென்னையை பொறுத்தமட்டில் போக்குவரத்து நெரிசல் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. குறிப்பாக காலை, மாலை என பீக் ஹவர்ஸில் சில கிலோமீட்டர் தூரத்தை கடக்க மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியிருக்கிறது. ஆனால், இதே பயண தொலைவை வெறும் 10 முதல் 20 நிமிடங்களில் வானத்தில் பறந்து சென்றால் எப்படி இருக்கும்?
இதை நனவாக்கும் முயற்சியில், சென்னையைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒன்று மிகப்பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்தியாவின் முதல் மின்சார விமானத்தின் முழு அளவிலான மாதிரியை அறிமுகப்படுத்தி, அடுத்த ஆண்டில் சான்றிதழ் பெறும் வகையில், அதற்கான பறக்கும் சோதனையை இலக்காக நிர்ணயித்து, அந்நிறுவனம் வேலைகளைத் துரிதப்படுத்தி வருகிறது.
சென்னையை தலைமையிடமாகக் கொண்ட தி இ-பிளேன் கம்பெனி (The ePlane Company) ஐஐடி மெட்ராஸில் தொடங்கப்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனம். இந்நிறுவனம் தயாரித்துள்ள மின்சாரத்தில் இயங்கக்கூடிய விமானத்தின் மாதிரி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது சாதாரண விமானம் அல்ல. ஹெலிகாப்டர் போல செங்குத்தாக புறப்பட்டு, பின்னர் விமானம் போல முன்னோக்கிப் பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த விமானம் இயங்க நீண்ட ஓடுபாதை தேவையில்லை. நகரங்களில் இருக்கும் ஹெலிபேட் அல்லது கட்டடங்களின் மொட்டை மாடியில் இருந்தே இதை சுலபமாக இயக்க முடியும் என்பதுதான் இதன் சிறப்பு.
இதில் விமானியுடன் அதிகபட்சமாக 2 பயணிகள் வரை அமர்ந்து பயணிக்கலாம் அல்லது 200 கிலோ வரை பொருள்களை சுமந்து செல்லலாம். ஒருமுறை சார்ஜ் செய்தால் 110 கிலோமீட்டர் தூரம் வரை தடையின்றி பறக்கும் வகையில் இந்த விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பயணிகள் போக்குவரத்துக்கு மட்டும் இல்லாமல், அவசரகால மருத்துவ சேவைக்கான ஏர் ஆம்புலன்ஸ், சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்கும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
விமானம் முற்றிலும் மின்சாரத்தில் இயங்குவதால் கார்பன் வெளியேற்றம் குறைந்து, சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காது என அதன் வடிவமைப்பாளர்கள் கூறுகின்றனர்.
தற்போது முழு அளவிலான விமானம் தயாராகியுள்ள நிலையில், அடுத்த ஆண்டு மே அல்லது ஜூன் மாதத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு, 2028-இல் வர்த்தக பயன்பாட்டுக்கு வரும் என இ-பிளேன் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
மேலும், சென்னையில் உள்ள வானளாவிய கட்டடங்களுக்கு மத்தியில் தங்குதடையின்றி பயணிக்கும் வகையில், இந்த விமானத்தின் வடிவமைப்பில் மிகவும் கவனம் செலுத்தியதாக கூறியுள்ள அந்நிறுவன சிஇஓ சத்யா சக்ரவர்த்தி, இந்த விமானத்தின் செயல்திறனைப் பொறுத்து பிற நாடுகளுக்கும் கொண்டு செல்ல முடிவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
இன்றைக்கு வாகனங்களின் பெருக்கத்தால் சென்னை முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நிலையில், ஆம்புலன்ஸுகள் சிக்கி திணறி செல்ல வேண்டிய நிலை நீடிக்கிறது. இந்தக் காலகட்டத்தில், இதுபோன்ற சிறியரக விமானங்கள் பயன்பாட்டுக்கு வந்தால், அது இந்திய விமானப் போக்குவரத்து வரலாற்றில் முக்கிய மைல்கல்லாக இருக்கும்…
















