மேகமலை பகுதியில் வசிக்கும் கிராம மக்களை வெளியேற்றும் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருவதாக சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
மேகமலை பகுதிகளில் வசிக்கும் கிராம மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூரத்தி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
அப்போது பேசிய அவர், மேகமலை பகுதியில் உள்ள கிராமங்களில் 100 ஆண்டுகளுக்கு மேலாக 5 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருவதாகவும், ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியை அரசிபட்டி தொகுதியாக மாற்றியது அதிமுக அரசு எனவும் தெரிவித்தார். சாலை மற்றும் மின் இணைப்பு வசதிகளுக்கு வனத்துறை தடையாக உள்ளது என்றும், 100 ஆண்டுகளுக்கு மேல் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
மேலும், கொள்கை முடிவு எடுத்து தமிழ்நாடு அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இதே கருத்தை திமுக எம்எல்ஏ மகாராஜனும் வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்து பேசிய சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், 2009ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் காப்புக்காடாக அறிவிக்கப்பட்டது என்றும், அப்போது முறையாக கையாண்டிருந்தால் இத்தகைய இக்கட்டான சூழல் ஏற்பட்டிருக்காது எனவும் கூறினார்.
அதிமுக ஆட்சிக்காலத்தில் வனப்பகுதி புலிகள் காப்பகம் என அறிவிக்கப்பட்டது என்றும், இது தொடர்பாக வழக்குகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனவும் குறிப்பிட்டார். 2017ல் தாக்கல் செய்யப்பட்ட மனு, உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளில் தமிழக அரசு சரியான வாதங்களை முன்வைத்து வருகிறது எனக்கூறிய அமைச்சர் நிர்மல்குமார், மேகமலை விவகாரத்திற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது என தெரிவித்தார்.
















