இந்திய கடற்படைக்காக 1,943 கோடி ரூபாய்க்கு இரண்டு (Sea Guardian) சீ கார்டியன் ட்ரோன்களை 30 மாதங்களுக்கு அமெரிக்க நிறுவனத்திடமிருந்து குத்தகைக்கு எடுக்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. விலைக்கு வாங்காமல் குத்தகைக்கு எடுப்பதன் பின்னணி என்ன ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
2020 நவம்பரில் லடாக் எல்லை பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவுடனான ராணுவ மோதலுக்குப் பிறகு இரண்டு (Sea Guardian) சீ கார்டியன் ட்ரோன்களை குத்தகை அடிப்படையில் இந்திய கடற்படை இயக்கி வருகிறது.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் தொடர்ச்சியான உளவு பார்த்தல் மற்றும் கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தவும், நவீன சென்சார்கள் மற்றும் பல திறன் கொண்ட கருவிகள் மூலம் கடல் எல்லைப் பாதுகாப்பை மேம்படுத்தவும் இந்தியா திட்டமிட்டுள்ளது.
இதற்காக 2024- ஆம் ஆண்டு அக்டோபரில் 15 Sea Guardian சீ கார்டியன்’ ட்ரோன்களும், ராணுவம் மற்றும் விமானப்படைக்கு 16 ‘ஸ்கை கார்டியன்’ Sky Guardian ட்ரோன்களும் என மொத்தம் 31 MQ-9B ட்ரோன்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது.
இதன் முதல் தொகுப்பு 2029ம் ஆண்டு தான் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் இந்திய கடற்படைக்காக இரண்டு Sea Guardian சீ கார்டியன் ட்ரோன்களை 30 மாத காலத்துக்குக் குத்தகைக்கு எடுப்பதற்காக ஒப்பந்தம் செய்துள்ளது.
கணிசமான பராமரிப்பு மற்றும் ஆதரவுப் பொறுப்புகளை வழங்குநரிடம் ஒப்படைக்க முடியும் என்பதால் முழுமையாக வாங்குவதை விட குத்தகைக்கு எடுப்பது சாதகமான முடிவாகவே பார்க்கப்படுகிறது.
மேலும் ஏற்கனவே இயக்கி வரும் சீ கார்டியன்களின் அனுபவத்தைப் பாதுகாக்கவும், நிலைநிறுத்தவும், விரிவுபடுத்தவும் இந்தப் புதிய குத்தகை பயன்படும் என்றும் கூறப்படுகிறது.
அமெரிக்காவின் ஜெனரல் அட்டாமிக்ஸ் ஏரோநாட்டிகல் சிஸ்டம்ஸ், இன்க். (GA-ASI) நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட MQ-9B சீ கார்டியன் என்பது, ஸ்கைகார்டியன் உயரமான நீண்ட-தாங்குதிறன் (HALE) கொண்ட விமானக் குடும்பத்தின் கடல்சார் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட ஒரு அதிநவீன ட்ரோன்களாகும். .
இந்த சீ கார்டியன் ட்ரோன்கள், நீண்ட நேரம் வானில் பறந்து உளவு பார்த்தல் மற்றும் துல்லியமாகத் தாக்கும் பணிகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. சுமார் 30 மணி நேரத்துக்கும் மேலாக வானில் பறக்கக்கூடியதும் , 40,000 அடிக்கும் அதிகமான உயரத்தில் இயங்கக்கூடியதுமான இந்த சீ கார்டியன் ட்ரோன்கள் பரந்த கடல் மற்றும் நிலப்பரப்புகளைக் கண்காணிக்கக்கூடியவகையில் உருவாக்கப் பட்டுள்ளது.
450 கிலோ எடையுள்ள குண்டுகளையும் சுமந்து செல்லும் திறன் கொண்ட இந்த சீ கார்டியன் ட்ரோன்கள்
தரைப்பகுதியைத் தாக்குதல் மற்றும் உளவு பார்த்தல் பணிகளுக்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப் பட்டுள்ளது.
360-டிகிரி மேற்பரப்பு-தேடல் ரேடார், தானியங்கி அடையாள அமைப்பு ரிசீவர், உயர்-வரையறை எலக்ட்ரோ-ஆப்டிகல்/இன்ஃப்ரா-ரெட் கேமராக்கள், மற்றும் சோனோபாய் டிஸ்பென்சர்கள் உள்ளிட்ட நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்புப் போர் தேர்வுகள் ஆகிய அம்சங்களை இந்த சீ கார்டியன் ட்ரோன்கள் கொண்டுள்ளது.
உயர்-தெளிவுத்திறன் ஒளியியல் கருவிகள், மேம்பட்ட கடல்சார் ரேடார் மற்றும் நீண்ட தூர உணர்விகள் ஆகியவற்றைக் கொண்டுள்ள இந்த சீ கார்டியன் நீர்மூழ்கிக் கப்பல்கள், இந்தியாவின் கடல்சார் கள விழிப்புணர்வை உடனடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு தீவிரமடைந்த புவிசார் அரசியல் சூழலும், அமெரிக்கா-ஈரான் இடையே தொடர்ந்து நீடிக்கும் நிச்சயமற்ற போரும் இந்தியப் பெருங்கடல் பாதுகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்பிரிக்காவின் கிழக்குக் கடற்கரை முதல் மலாக்கா ஜலசந்தி வரை பரந்து விரிந்த இந்தியப் பெருங்கடலில் கப்பல் போக்குவரத்துப் பாதைகள், மற்றும் முக்கியக் குறுகிய நீர்வழிகள் ஆகியவற்றைக் கண்காணிப்பது இந்தியாவுக்கு ஒரு முக்கிய பாதுகாப்புச் சவாலாக உள்ளது.
எதிர்காலத்தில் தனக்கென சொந்தமான கண்காணிப்புத் திறனைப் பெறும் வரை, இந்தியப் பெருங்கடலின் மீதான கண்காணிப்பிலிருந்து கடற்படை விலகிவிடாமல் இருப்பதை இந்த புதிய குத்தகை ஒப்பந்தம் உறுதி செய்துள்ளது.
















