ஈரான் நிறுவனங்களிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியில் ஈடுபட்ட 4 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. மேலும் இந்தியர்களும் அமெரிக்காவின் பொருளாதார தடைகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த வாரத்தில் ஈரானின் பொருளாதாரத்தை முடக்கும் இறுதி முயற்சியாக, அந்நாடு மீது ECONOMIC D -DAY என்ற கடுமையான நடவடிக்கையை அமெரிக்கா எடுத்தது.
பொருளாதார ரீதியாக ஈரானைப் பலவீனப்படுத்துவதன் மூலம், அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைக்கும் நோக்கத்தில் அந்நாட்டை பொருளாதார ரீதியாக ஒதுக்கப்பட்ட நாடாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
தொடர்ந்து கடந்த செவ்வாய்கிழமை ஈரான் மீது “Operation Economic Outcast” ‘ஆபரேஷன் எகனாமிக் அவுட்காஸ்ட்’ என்ற நடவடிக்கையை அமெரிக்கா அறிவித்தது. இதன் மூலம் ஈரானின் வருவாய்க்கு வாய்ப்புள்ள அனைத்து வழிகளையும் தடுக்கும் புதிய பொருளாதாரத் தடைகளை அமெரிக்க அமல் படுத்தியுள்ளது.
மேலும் ஈரானுடன் பொருளாதார ரீதியான உறவைத் துண்டிக்குமாறு பல நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா, அதனை மீறினால் அந்நாடுகள் மற்றும் நிறுவனங்கள் மீது இரண்டாம் நிலை பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
“Operation Economic Outcast” நடவடிக்கையின் கீழ் ஈரானின் பெட்ரோலியம் மற்றும் பெட்ரோகெமிக்கல் வர்த்தகத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இந்தியாவில் செயல்படும் Portease Partners LLP, Sadashiva Overseas Ltd, PP Softtech Pvt Ltd மற்றும் Prakrutees Infra Impex India Pvt Ltd ஆகிய நான்கு நிறுவனங்கள் மற்றும் Portease நிறுவனத்தின் நியமிக்கப்பட்ட கூட்டாளிகளான Harish Ramchandra Rangi மற்றும் Indrismiya Ashrafmiya Shekh, மற்றும் PP Softtech நிறுவனத்தைச் சேர்ந்த Prashant Garg ஆகிய மூன்று இந்தியர்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
ஈரானின் பெட்ரோகெமிக்கல் பொருட்களை இந்தியாவுக்கு இறக்குமதி செய்வதற்கு சுங்கத் தரகராகச் செயல்பட்டு உதவியதாக Portease Partners நிறுவனம் மீது குற்றச்சாட்டப்பட்டு பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
மேலும், Sadashiva Overseas நிறுவனம் பல்வேறு நிறுவனங்களிடமிருந்து சுமார் 69 மில்லியன் டாலர் மதிப்பிலான ஈரானிய பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்ததாகவும், PP Softtech மற்றும் Prakrutees Infra ஆகிய நிறுவனங்கள் ஒவ்வொன்றும் சுமார் 25 மில்லியன் டாலர் மதிப்பிலான ஈரானின் பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்ததாகவும் குற்றச்சாட்டப்பட்டுள்ளது.
ஈரானிலிருந்து பெட்ரோகெமிக்கல் பொருட்களை வாங்குதல், கையகப்படுத்துதல், விற்பனை செய்தல், சந்தைப்படுத்துதல் தொடர்பான “குறிப்பிடத்தக்க பரிவர்த்தனையில்” தெரிந்தே ஈடுபட்டதற்காகவே இந்த நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது தடைகள் விதிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவுத் துறை விளக்கமளித்துள்ளது.
ஒரே நேரத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 60 நிறுவனங்கள், நபர்கள்,மற்றும் கப்பல்கள் அமெரிக்காவின் பொருளாதார தடைகளுக்கு ஆளாகியுள்ளன.
ஈரான் ஆட்சியின் உறுதியைக் குலைக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக, ஈரானுக்குத் துணைபோகும் பல நிறுவனங்கள் மற்றும் நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா கடுமையான நடவடிக்கையை எடுத்துள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் டாமி பிகாட் தெரிவித்துள்ளார்.
















