கடந்த 5 ஆண்டுகளில், வெளிநாடுகளில் தங்கிப் படித்துவந்த 403 இந்திய மாணவர்கள் விபத்து, உடல்நல பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இறந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4-ம் தேதி நடந்து வருகிறது. இந்த சூழலில், மக்களவையில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் தாக்கல் செய்த அறிக்கையில், “கடந்த 2018-ம் ஆண்டு முதல் இதுவரை 403 இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உயிரிழந்திருக்கிறார்கள்.
இதில், கனடாவில் அதிகபட்சமாக 91 இந்திய மாணவர்கள் இறந்திருக்கிறார்கள். அதேபோல, பிரிட்டனில் 48 மாணவர்களும், ரஷ்யாவில் 40 மாணவர்களும், அமெரிக்காவில் 36 மாணவர்களும், ஆஸ்திரேலியாவில் 35 மாணவர்களும், உக்ரைனில் 21 மாணவர்களும், ஜெர்மனியில் 20 மாணவர்களும், சைப்ரஸ் நாட்டில் 14 மாணவர்களும், இத்தாலி மற்றும் பிலிப்பைன்சில் தலா 10 மாணவர்களும் இறந்திருக்கிறார்கள்.
அதேசமயம், வெளிநாடுகளில் பயிலும் இந்திய மாணவர்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்து வருகிறது. எதிர்காலத்தில் இது போன்ற அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க, இந்தியத் தூதர்கள் தொடர்ந்து பல்கலைக்கழகங்களுக்குச் சென்று மாணவர்களுடன் கலந்துரையாடி வருகின்றனர்.
விபத்துகளில் சிக்கும் மாணவர்களுக்குத் தேவையான அவசர மருத்துவ உதவி, தங்குமிடம் ஆகியவையும் தூதரகங்கள் வாயிலாக வழங்கப்படுகின்றன” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.