2047-ம் ஆண்டுக்குள் 35 ட்ரில்லியன் பொருளாதாரத்தை இந்தியா அடையும் என்று மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள உலக வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்று தொடங்கியது. தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய பியூஷ் கோயல், “வணக்கம், நமஸ்காரம்” என்று தனது உரையை தமிழில் தொடங்கியவர், “காஞ்சி பட்டு போல் பல வண்ணங்களில் குவிந்திருக்கும் அனைவரையும் காண்பதில் மகிழ்ச்சி. 1 ட்ரில்லியன் பொருளாதார இலக்கு நிர்ணயித்து பயணிக்கும் தமிழகத்திற்கு வாழ்த்து.
ஆதித்யா எல்-1 திட்ட இயக்குனர் தமிழகத்தைச் சேர்ந்தவர். நாடு வலிமையடைய அனைத்து பகுதிகளும் சீரான வளர்ச்சி அடைய வேண்டும். தரமான கல்வி, சுகாதாரம், குடிநீர் வழங்குவதில் கவனம் செலுத்தி வருகிறோம்.
வளர்ந்த நாடாக நமது நாட்டை மாற்றுவது நம் ஒவ்வொருவரின் கனவாக இருக்க வேண்டும். ஊழலில்லாத இந்தியாவை உருவாக்கவும், பெண்களின் சக்தியை வலிமைப்படுத்தவும் நாம் செயல்படுவோம்.
பிரதமர் மோடியின் இதயத்தில் தமிழகத்தின் வளர்ச்சிக்கு தனி இடம் உள்ளது. இந்தியாவின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் செங்கோல் தமிழகத்தை சேர்ந்தது. இந்தியாவின் பண்பாட்டிற்கு தமிழக கலாச்சாரம் அளித்து வரும் பங்கு மிகப்பெரியது.
இந்தியாவின் கலாச்சார தொடர்புகளை பிரதிபலிக்கவே காசி தமிழ்ச் சங்கமம் போன்ற நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. பிரதமர் மோடி தலைமையின் கீழ் 10 ஆண்டுகளாக நாடு வளர்ச்சி அடைந்து வருகிறது.
10 ஆண்டுகளுக்கு முன்பு நலிவடைந்த பொருளாதாரத்தில் இருந்தது இந்தியா. தற்போது இந்தியா வளர்ச்சியடைந்த முதல் 5 நாடுகளின் பட்டியலில் உள்ளது. உலகிலேயே மக்கள் தொகையில் இளைஞர்களை அதிகம் கொண்ட நாடு இந்தியா.
2047 என்ற இலக்கை நோக்கி நாட்டை வேகமாக முன்னெடுத்துச் செல்கிறோம். தரமான கல்வி, சுகாதாரம், குடிநீர் வழங்குவதில் கவனம் செலுத்துகிறோம். 2047-ம் ஆண்டுக்குள் ஒவ்வொன்றிலும் காலனி அடிமைத்தனத்தில் இருந்து மீள்வோம்.
இந்தியாவின் 100-வது சுதந்திர தினத்திற்குள் ஒருங்கிணைந்த வளர்ச்சியை அடைவோம். 2047-க்குள் 35 ட்ரில்லியன் பொருளாதாரத்தை இந்தியா அடையும். இதனை தமிழகமும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
உலகிலேயே தொழில் வளர்ச்சிக்கு மிகச் சிறந்த இடங்களில் ஒன்று தமிழகம். 2014 முதல் பிரதமர் மோடி எடுத்த தொடர் நடவடிக்கையால் தொழில்துறை வலுவாக உள்ளது. மத்திய அரசின் முயற்சிகளுக்கு ஆதரவாக செயல்படும் தமிழக அரசுக்கு நன்றி” என்றார்.