கோவையில் வடக்கு தொகுதியில் வீதிகளில் நின்றும், வீடுகளுக்கு சென்றும் திமுகவினர் பணம் கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான பரப்புரை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் கோவையின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் முகாமிட்டுப் பணப்பட்டுவாடா செய்து வருவதாகப் புகார்கள் எழுந்து உள்ளது. திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களான கரூரைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான நபர்கள், கோவையில் வீதி, வீதியாகப் புகுந்து வாக்காளர்களுக்குப் பணத்தை வாரி வழங்கி வருவதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தடுக்க முயன்ற தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியினருக்கும், கரூர்க் கும்பலுக்கும் இடையே ஆங்காங்கே மோதல்கள் வெடிக்கத் தொடங்கி உள்ளன. கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட ராமநாதபுரம் மற்றும் புலியகுளம் பகுதிகளில் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்ட திமுகவிரை பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க வினர் கையும், களவுமாக மடக்கிப் பிடித்தனர்.
அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் கைகலப்பாக மாறியதால் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இது குறித்து தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியரிடம் கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் புகார் மனு அளித்து உள்ளார்.
















