பிரதமர் மோடி குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் அளித்துள்ளது.
இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையருக்கு பாஜக அளித்துள்ள மனுவில், கார்கேவின் பேச்சு தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தனது கருத்தை கார்கே உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் அல்லது பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அவர் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்றும் பாஜக வலியுறுத்தி உள்ளது.
சர்ச்சைக்குரிய அந்தப் பேச்சு சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் பரவுவதை உடனடியாகத் தடுக்க வேண்டும் என்றும், ஏற்கனவே உள்ள வீடியோக்களை நீக்க உத்தரவிட வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்தை பாஜக கேட்டுக்கொண்டுள்ளது.
பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் கார்கே மீது குற்றவியல் மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
















