கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திமுக அலுவலகத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வைக்கப்பட்டிருந்த 44 லட்சம் ரூபாயை, தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் செல்லத்துரை, கடையநல்லூர் அலுவலகத்தில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய, மூட்ட மூட்டையாக பணம் வைத்திருப்பதாக, தென்காசி மாவட்ட தேர்தல் கண்காணிப்பு நிலையத்துக்கு புகார் வந்தது. இதையடுத்து
நேரில் சென்ற பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், மூட்டையில் கட்டுக்கட்டாக 44 லட்சம் ரூபாய் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், கடையநல்லூர் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். பத்து லட்சத்திற்கும் அதிகமாக பணம் இருந்ததால் இதுகுறித்து வருமான வரி அலுவலர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகளிடம், பறிமுதல் செய்யப்பட்ட 44 லட்ச ரூபாய் பணத்தை, தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் ராஜேந்திரன் வழங்கினார். திமுக அலுவலகத்தில் 44 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
















