திமுக அல்லது அதிமுக அரசு அமைத்தால், தங்களது அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்யக்கூடும் என்று தவெக எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதுச்சேரி அரியாங்குப்பத்தில் உள்ள தனியார் விடுதியில் அதிமுக எம்எல்ஏக்கள் உடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். ஆலோசனையின்போது, அதிமுக எம்எல்ஏக்கள் ஒற்றுமையாக இருக்குமாறும், பேரம் பேசி ஆசை காட்டுவார்கள் ஏமாந்து விடாதீர்கள் எனவும், இபிஎஸ் அறிவுறுத்தியதாக தகவல் வெளியானது.
இந்தநிலையில், ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய புதுச்சேரி அதிமுக செயலாளர் அன்பழகன், பதவி வெறியில் தமிழக அரசியலை புரட்டிப்போட முயலும் காங்கிரஸ் முயற்சியை இபிஎஸ் முறியடிப்பார் என்றும், இபிஎஸ் தலைமையில் ஆட்சி அமையும் வரை அதிமுக எம்எல்ஏக்கள் புதுச்சேரியில் இருப்பார்கள் என்றும் தெரிவித்தார்.
இதற்கிடையே பெரும்பான்மை ஆதரவு இல்லாத காரணத்தால் விஜய்யை அரசு அமைக்க ஆளுநர் அழைக்க மறுத்ததைத் தொடர்ந்து, மாநில அரசியலில் நிலவும் அதிருப்தி மற்றும் உறுதியற்ற நிலை அதிகரித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் திமுக அல்லது அதிமுக அரசு அமைத்தால், தங்களது அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்யக்கூடும் என்று தவெக எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
















