தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் 3வது முறையாக ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 107 இடங்களை பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆட்சியமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில், தவெக-வுக்கு காங்கிரஸை தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. விசிக ஆதரவு அளிப்பதாக தகவல் வெளியான போதிலும், இதுவரை ஆதரவு கடிதம் வழங்கவில்லை. தவெக ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைத்ததாகக் கூறப்பட்ட நிலையில், சென்னை கிண்டியிலுள்ள உள்ள மக்கள் மாளிகைக்கு சென்ற தவெக தலைவர் விஜய், ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை 3வது முறையாக சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். அப்போது விஜய், ஆளுநருக்கு பொன்னாடை அணிவித்தார். தவெக நிர்வாகிகள் மற்றும் ஜனநாயகன் திரைப்பட தயாரிப்பாளர் வெங்கட் நாராயணன் ஆகியோர் உடனிருந்தனர்.
ஆளுநருடனான சந்திப்புக்குப்பின், தவெக ஆட்சி அமைக்க ஆதரவளித்த கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களை விஜய் நேரில் சந்தித்து, பூங்கொத்து மற்றும் பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்துக் கொண்டார். இந்நிலையில், தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக நாளை அல்லது நாளை மறுநாள் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பதவியேற்பு விழா நடைபெறுவதாக தகவலும் வெளியாகியுள்ளது.
















