தமிழகத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் நிரந்தர சாய்தள வசதியை உறுதி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கும், மாநில அரசுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வாக்குச்சாவடிகளில் உரிய வசதிகளை ஏற்படுத்தி தரக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசு கட்டடம் மட்டுமின்றி அனைத்து தனியார் கட்டடங்களும் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தில் அடங்கும் என்றும்,
வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் சாய்தளம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினர்.
உச்சநீதிமன்ற உத்தரவை கடைபிடிக்கும்படி அனைத்து மாநில அரசுகளுக்கும் தேர்தல் ஆணையம் கடிதங்கள் அனுப்பியுள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், வாக்குச்சாவடிகளாக பயன்படுத்தப்படும் அரசு கட்டடங்கள், கல்வி நிறுவனங்களில் நிரந்தர சாய்தள வசதிகள் ஏன் ஏற்படுத்தி தரவில்லை என கேள்வி எழுப்பினர்.
நடந்து முடிந்த தமிழக தேர்தலில் கூட வாக்குச்சாவடிகளாக அறிவிக்கப்பட்ட கட்டடங்களில் நிரந்தர சாய்தளங்கள் அமைக்கும் பணிகள் முழுமையடையவில்லை எனக் குறிப்பிட்டுள்ள நீதிபதிகள்,வாக்குச்சாவடிகளாக அறிவிக்கப்படும் அரசு கட்டடங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் நிரந்தர சாய்தள வசதி ஏற்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கும், மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயன்படுத்தும் வகையில் இணையதளங்கள் இருப்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என நீதிபதிகள் ஆணையிட்டனர்.
















