தமிழகத்தில் 40 RTO அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய அதிரடி சோதனையில் 37 லட்சத்து 81 ஆயிரம் ரூபாய் ரொக்கம் சிக்கியுள்ளது.
கோவை காந்திபுரத்தில் உள்ள மத்திய ஆர்.டி.ஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு உள்ளிட்ட சேவைகளில் லஞ்சம் கைமாறுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அலுவலக நுழைவாயில்கள் மூடப்பட்டு, வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மற்றும் இடைத்தரகர்களின் வாகனங்கள் தீவிரமாக சோதனை செய்யப்பட்டன.
இதே போல திருச்சி பிராட்டியூரில் உள்ள மேற்கு ஆர்.டி.ஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த சோதனையில் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது.
சேலம் மாவட்டம் கந்தம்பட்டி மேற்கு ஆர்டிஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.ஏடிஎஸ்பி கிருஷ்ணராஜ் தலைமையில் நடந்த சோதனையில் கணக்கில் வராத 50 ஆயிரம் ரூபாய் சிக்கியது.
திருப்பூர் தெற்கு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் கணக்கில் வராத 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இங்கு லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் சசி லேகா தலைமையான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அலுவலகத்தின் ஒவ்வொரு பிரிவாகச் சென்று சோதனை நடத்தியதில், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பணம் சிக்கியது.
இதே போல திண்டுக்கல் மாவட்டம், பழனி ஆர்.டி.ஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அலுவலகக் கதவுகளை மூடி அங்கிருந்த அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத 37 லட்சத்து 81ஆயிரம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், G-Pay மூலம் 5 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் பரிவர்த்தனை நடந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
















