மேற்காசிய மோதலால் கடந்த 3 மாதங்களில் எரிபொருள்துறையில் ஒரு லட்சத்து 88 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதனால் இந்தியாவின் எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் கடும் இழப்பைச் சந்தித்துள்ளன.
இதுகுறித்து பேசிய மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ஏப்ரல் முதல் ஜுன் வரையிலான மூன்று மாதங்களில் மொத்த விலை ஈடுசெய்யப்படாத இழப்பு 1 லட்சத்து 88 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக கூறினார்.
தற்போது சுத்திகரிக்கப்படும் கச்சா எண்ணெய் இரண்டு மாதங்களுக்கு முன்பு அதிக விலையில் வாங்கப்பட்டதால், உடனடியாக பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
மேலும், எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய இந்தியா புதிய நாடுகளிலிருந்தும் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி இறக்குமதியை விரிவுபடுத்தி வருவதாகவும் ஹர்தீப் சிங் பூரி கூறினார்.
















