மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், தமிழகம் மற்றும் மிசோரத்தில் 13 இடங்களில் தேசிய புலனாய்வு முகமையான NIA அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
கடந்த 2024-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், வங்கக் கடலில் பேரன் தீவுகள் அருகே மியான்மர் படகில் இருந்து 6 ஆயிரத்து 16 கிலோ மெத்தாம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கில், தமிழகத்தில் 8 இடங்களிலும், மிசோரத்தில் 5 இடங்களிலும் சோதனை நடைபெற்றது. சோதனையில் பல்வேறு டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நடைபெற்ற சோதனையில் 71 லட்சம் ரூபாய், 53 ஆயிரத்து 500 அமெரிக்க டாலர்கள் மற்றும் மியான்மர் பணம் 1 லட்சத்து 50 ஆயிரம் கியாட் கைப்பற்றப்பட்டன. மேலும், சாம்பாய் பகுதியில் 22 லட்சத்து 38 ஆயிரம் ரூபாயும், ஐஸ்வால் பகுதியில் 20 லட்சத்து 73 ஆயிரம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டதாக NIA தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் ஏற்கனவே 6 மியான்மர் நாட்டவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளனர். சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பில் தொடர்புடைய மேலும் பலரை கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கையில் NIA தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
















