ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து ஆண்டுதோறும் சமர்ப்பிக்கப்படும் மங்கல சீர்வரிசைப் பொருட்கள் புறப்பட்டன.
ஆண்டாள், பெருமாள் மீது கொண்ட பக்தியால் பூமாலை சூட்டி வழிபட்டதுடன், ஸ்ரீரங்கம் ரெங்கநாதருடன் ஐக்கியமானதாக ஐதீகம். இதன் காரணமாக ஸ்ரீரங்கம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில்களுக்கு இடையே நீண்டகாலமாக மங்கலப்பொருட்கள் பரிமாற்றம் நடைபெற்று வந்துள்ளது. இடையில் நின்றுபோன இந்த பாரம்பரியம், இரு ஊர் பக்தர்களின் முயற்சியால் கடந்த சில ஆண்டுகளாக மீண்டும் தொடர்கிறது.
இதன்படி, பட்டு வஸ்திரங்கள், மஞ்சள், குங்குமம், பழங்கள், சந்தனம், தாம்பூலம் உள்ளிட்ட மங்கலப்பொருட்கள், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் ரங்கவிலாச மண்டபத்தில் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டன.
பின்னர் கோயில் உள்வீதிகளில் ஊர்வலமாக எடுத்துவரப்பட்ட மங்கலப்பொருட்கள், இன்று ஸ்ரீவில்லிபுத்தூருக்கு கொண்டு செல்லப்பட்டு ஆண்டாள் கோவிலில் சமர்ப்பிக்கப்பட உள்ளன. ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேரோட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில், ஸ்ரீரங்கம்–ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில்களுக்கு இடையேயான இந்த பாரம்பரிய மங்கலப்பொருட்கள் பரிமாற்றம் பக்தர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
















