வாளையாறு அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதியதில் குட்டியுடன் தாய் யானை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள-தமிழக எல்லையான வாளையாறு சாவடிப்பாறை குடியிருப்பு பகுதியில் இருந்து வனப்பகுதிக்கு திரும்பிய யானைகள் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, அவற்றின் மீது மங்களூரு – சென்னை விரைவு ரயில் மோதியது.
இதில் குட்டியுடன் தாய் யானை உயிரிழந்தது. தகவலறிந்து வந்த கேரள, தமிழக வனத்துறை மற்றும் ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.
ரயில் மோதியதில் யானைகளின் உடல்கள் சுமார் 50 மீட்டர் தூரம் தண்டவாளத்தில் இழுத்துச் செல்லப்பட்டதாகவும், விபத்தைத் தொடர்ந்து ரயில் 20 நிமிடங்கள் வனப்பகுதியில் நிறுத்தப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
மேலும், வனப்பகுதியில் ரயிலின் வேகம் குறைவாக இருந்ததால் தடம் புரளாமல் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
















