கோயில் சொத்துகளை மீட்டெடுக்கத் தேவையான நடவடிக்கைகள் வேகப்படுத்தப்படும் என திருச்சி மண்டல கூடுதல் ஆணையர் பொன்மணி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி கோயிலுக்குச் சொந்தமான பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை பாதுகாக்க இந்து சமய அறநிலையத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளை இணைத்து ஒரு பிரத்யேக ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
திருச்சி மண்டல கூடுதல் ஆணையர் பொன்மணி தலைமையிலான குழுவினர், பழனி தேவஸ்தான தலைமை அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது கோயிலுக்கு சொந்தமான நிலங்கள், கணக்கில் வராத சொத்துகள் மற்றும் சட்டவிரோத பெயர் மாற்றங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
இதனை தொடர்ந்து, பழனி பிரதான கோயில் மற்றும் உப கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள், கட்டடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி மண்டல கூடுதல் ஆணையர் பொன்மணி, கோயில் சொத்துகளுக்கான ஏற்கனவே உள்ள பதிவேடுகளை மீண்டும் ஒருமுறை சரிபார்க்கும் பணி நடைபெற்று வருவதாகவும், நீதிமன்ற உத்தரவுகளுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும், ஒருங்கிணைப்புக் குழு மூலம் கோயில் சொத்துகளை மீட்க தேவையான நடவடிக்கைகள் வேகப்படுத்தப்படும் எனவும் கூறினார்.
















