சென்னை, மும்பை போன்ற பெருநகரங்களில் இயங்கும் தனியார் மருத்துவமனைகளின் அறை வாடகை, மூன்று நட்சத்திர ஹோட்டல்களின் அடிப்படை அறை கட்டணத்தை விட அதிகமாக இருக்கக் கூடாது என நாடாளுமன்ற நிலைக்குழு வலியுறுத்தியுள்ளது.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் 176-வது அறிக்கை இரு அவைகளிலும் சமர்ப்பிக்கப்பட்டது.
அதில், பெருநகரங்களில் இயங்கும் தனியார் மருத்துவமனைகளின் அறை வாடகை, மூன்று நட்சத்திர ஹோட்டல்களின் அடிப்படை அறை கட்டணத்தை விட அதிகமாக இருக்கக் கூடாது என்றும், அடிப்படை அறை வாடகையுடன் மருத்துவர் கட்டணம், செவிலியர் சேவை, ஒருமுறை பயன்படுத்தக்கூடிய மருத்துவப் பொருட்கள், உணவு மற்றும் சலவை கட்டணங்களை சேர்த்துக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிக்கலான அல்லது நீண்டகால சிகிச்சையை தொடங்குவதற்கு முன்பே, அதற்கான முழு செலவு குறித்த விவரங்களை நோயாளிகளுக்கு மருத்துவமனைகள் கட்டாயம் வழங்க வேண்டும் என்றும்,
சிகிச்சைக்கான செலவு, காப்பீட்டு வரம்பு, கிடைக்கக்கூடிய நிதியுதவிகள் குறித்து நோயாளிகளின் குடும்பத்தினருக்கு விளக்கமளிக்க மருத்துவமனைகளில் தனி ஆலோசகரை நியமிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
புற்றுநோய் மற்றும் மரபியல் நோய்கள் போன்ற அதிக செலவு பிடிக்கும் சிகிச்சைகளுக்கு உதவ, கார்ப்பரேட் நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதிப் பங்களிப்புகளை ஒருங்கிணைத்து தனியாக தேசிய சுகாதார நிதியம் உருவாக்க வேண்டும் என்றும்,
முன்கூட்டியே நோய் கண்டறிதல், சிகிச்சை, மறுவாழ்வு மற்றும் வாழ்நாள் இறுதி வரையிலான சுகாதாரப் பராமரிப்பு என அனைத்து சேவைகளையும் உள்ளடக்கிய ஒற்றைக் கட்டணப் பொதியை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல, கிராமப்புறங்களில் சுகாதாரக் கட்டமைப்புகளை உடனடியாக வலுப்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற நிலைக்குழு வலியுறுத்தியுள்ளது.
















