லார் கிப்பான் குரங்குடன் வீடியோ வெளியிட்ட விவகாரம் தொடர்பாக, நடிகர் விக்ரமுக்கு வனத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
லார் கிப்பான் குரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ வெளியிட்ட விவகாரம் தொடர்பாக, அவரது மகளிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து திரைப்படத் தளத்தில் இருந்த நடிகர் விக்ரமிடம் நேரடியாக சென்று விசாரணை நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நடிகர் விக்ரமுக்கு வனத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். குரங்கு தொடர்பான விவரங்களை மூன்று தினங்களுக்குள் நேரில் ஆஜராகி வனத்துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரங்கு எங்கிருந்து வாங்கப்பட்டது? யாரிடமிருந்து பெறப்பட்டது? அதன் உரிமையாளர் யார்? குரங்கை வைத்திருப்பதற்கான உரிய ஆவணங்கள் மற்றும் அனுமதி உள்ளனவா? உள்ளிட்ட விவரங்களை அளிக்க வனத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மூன்று தினங்களுக்குள் நேரில் ஆஜராகி உரிய ஆவணங்களுடன் விளக்கம் அளிக்கத் தவறினால், வனத்துறை சட்டத்தின்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
















