முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்ற வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில், 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் முதலமைச்சர் விஜய் தலைமையில் வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது.
தவெக அரசு ஆட்சியமைத்த பிறகு முதன்முறையாக நடைபெற்ற இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில், ஆடைகள், காலணிகள், கார் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மொத்தம் 97 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, தைவான், ஆஸ்திரேலியா, ரஷ்யா உள்ளிட்ட 8 நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஒப்பந்தம் மேற்கொண்டன.
முதலமைச்சர் விஜய் முன்னிலையில், ஆவிட் குழுமம் 7 ஆயிரம் கோடி ரூபாயிலும், ஜே.கே. டயர் நிறுவனம் 5 ஆயிரத்து 143 கோடி ரூபாயிலும், ஜெர்மனியைச் சேர்ந்த டைம்லர் நிறுவனம் 4 ஆயிரம் கோடி ரூபாயிலும், ஃபீனிக்ஸ் கோத்தாரி நிறுவனம் ஆயிரம் கோடி ரூபாயிலும் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் மொத்தம் 67 ஆயிரத்து 452 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதலீட்டாளர்கள் மாநாட்டில் 4 ஆயிரத்து 476 கோடி ரூபாய் மதிப்பிலான 8 புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் விஜய் அடிக்கல் நாட்டினார். மேலும், 2 ஆயிரத்து 676 கோடி ரூபாய் மதிப்பிலான 5 நிறைவுற்ற திட்டங்களைத் தொடங்கி வைத்ததுடன், 777 கோடியே 74 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களையும் திறந்து வைத்தார்.
தொடர்ந்து, இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் முதலமைச்சர் விஜய் வழங்கினார்.
















