கோவையில் கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள மேலும் 6 மாணவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த 3-ம் ஆண்டு மாணவர் அமுதன், கடந்த 10-ம் தேதி சக மாணவர்களால் தாக்கப்பட்டதில் உயிரிழந்தார்.
இந்த வழக்கில் ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மதுரையைச் சேர்ந்த சந்தோஷ் என்ற மாணவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 6 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த 9-ம் தேதி அமுதன் உள்ளிட்ட 9 மாணவர்கள் முகமூடி அணிந்து, 4-ம் ஆண்டு மாணவர்கள் தங்கியிருந்த அறைக்குச் சென்று செல்போன்களை திருடியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில், அமுதனை அடையாளம் கண்ட மாணவர்கள் தாக்கியதில் அவர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் போதைப்பொருள் விவகாரத்தால் நடைபெறவில்லை என்றும், சுமார் 20 மாணவர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.
















