பழனி கோயிலுக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை முறைகேடாக பதிவு செய்த வழக்கை, சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பழனி கோயிலுக்கு சொந்தமான நிலத்தை தனிநபர்களுக்கு முறைகேடாக பதிவு செய்ததாக கூறப்படும் வழக்கை, சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி நகராட்சி மன்ற தலைவி உமா மகேஸ்வரி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், பழனி கோயில் தொடர்பான வழக்கில் 2 துறைகள் சம்பந்தப்பட்டுள்ளதால், சிபிசிஐடி விசாரணை நடத்தினால் விசாரணையின் நேர்மை பாதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சிபிசிஐடி கைப்பற்றிய ஆவணங்கள், சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களையும் உடனடியாக சிபிஐ வசம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
சிபிஐ மூலம் நேர்மையான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதி விக்டோரியா கௌரி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சிபிஐ தொடர்பான மனுக்களை தாம் விசாரிக்கவில்லை என தெரிவித்த நீதிபதி, சிபிஐ வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி முன்பு மனுவை பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்டார்.
















