இந்தியா – பாகிஸ்தான் இடையேயான சிந்து நதிநீர் ஒப்பந்தம் தற்போதைய வடிவில் தொடர முடியாது என்ற தனது நிலைப்பாட்டை இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ள நிலையில், ஜம்மு-காஷ்மீரில் சிந்து நதிப் படுகை தொடர்பான முக்கிய நீர்மின் மற்றும் நீர்வளத் திட்டங்களையும் வேகப்படுத்தி வருகிறது. இதன் பின்னணி என்ன? இந்தியாவின் இந்த நடவடிக்கை பாகிஸ்தானில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? விரிவாக பார்க்கலாம்…
கடந்த 1960-ஆம் ஆண்டு உலக வங்கியின் மத்தியஸ்தத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே கையெழுத்தான சிந்து நதிநீர் ஒப்பந்தம், இரு நாடுகளுக்கிடையேயான முக்கிய நீர்ப் பகிர்வு ஒப்பந்தமாக இருந்து வருகிறது. சிந்து, ஜீலம், செனாப் உள்ளிட்ட ஆறு நதிகளின் நீர் பயன்பாடு தொடர்பான விதிமுறைகளே இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையாக அமைந்துள்ளன.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக எல்லை தாண்டிய பயங்கரவாதம், மாறிவரும் காலநிலை, அதிகரித்துள்ள மக்கள் தொகை, புதிய நீர்மின் தேவைகள் உள்ளிட்ட காரணங்களால் இந்த ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டை இந்தியா தொடர்ந்து முன்வைத்து வருகிறது. பாகிஸ்தான் இதற்கு உரிய ஒத்துழைப்பை வழங்கவில்லை என்றும், தற்போதைய சூழலில் ஒப்பந்தம் பழைய வடிவில் செயல்பட முடியாது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ஜம்மு-காஷ்மீரில் சிந்து நதிப் படுகையில் நடைபெற்று வரும் முக்கிய நீர்மின் திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு பணிகளை இந்தியா வேகப்படுத்தி வருகிறது. நீரின் பயன்பாட்டை அதிகரிப்பது, மின் உற்பத்தியை மேம்படுத்துவது மற்றும் எதிர்கால நீர்வள மேலாண்மையை வலுப்படுத்துவது ஆகிய நோக்கங்களுக்காக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மறுபுறம், சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று பாகிஸ்தான் சர்வதேச அளவில் ஆதரவு திரட்ட முயற்சித்து வருகிறது. சமீபத்தில் கனடாவிடமும் உதவி கோரியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், பயங்கரவாதத்திற்கு எதிராக நம்பகமான நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுக்கும் வரை இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இருக்காது என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
சிந்து நதிநீர் ஒப்பந்தம் என்பது வெறும் தண்ணீர் பகிர்வு ஒப்பந்தம் மட்டுமல்ல. இந்தியா – பாகிஸ்தான் உறவுகளில் முக்கியமான உத்திசார்ந்த அம்சமாகவும் அது பார்க்கப்படுகிறது. அதனால், இந்த ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா எடுக்கும் ஒவ்வொரு முடிவும் நீர்வள மேலாண்மை மட்டுமல்லாமல், வெளியுறவுக் கொள்கை மற்றும் தேசிய பாதுகாப்பு கோணத்திலும் முக்கியத்துவம் பெறுகிறது.
ஒப்பந்தத்தை தற்போதைய வடிவில் தொடர முடியாது என்ற இந்தியாவின் சமீபத்திய நிலைப்பாடு, இரு நாடுகளுக்கிடையேயான உறவில் புதிய கட்டத்தை உருவாக்கியுள்ளது. இனி பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்றால், அது புதிய நிபந்தனைகள் மற்றும் புதிய அணுகுமுறையின் அடிப்படையில்தான் அமையும் என்றும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும்? இந்தியா மேற்கொள்ளும் புதிய நீர்வளத் திட்டங்கள் எந்த அளவுக்கு வேகம் பெறும்? பாகிஸ்தான் தனது நிலைப்பாட்டில் மாற்றம் கொண்டு வருமா? என்ற கேள்விகளுக்கு விரைவில் விடை கிடைக்கும்…
















