ஜப்பானுக்கான முக்கியத்துவம் வாய்ந்த அரிய வகை கனிமங்களின் ஏற்றுமதியைச் சீனா பெருமளவில் குறைத்துள்ளது. சில கனிமங்களின் ஏற்றுமதியைச் சுத்தமாக நிறுத்தியுள்ளது. இதற்கான காரணம் என்ன? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ஸ்மார்ட்போன்கள், மின்சார வாகனங்கள், காற்றாலைகள் மற்றும் ஏவுகணை வழிகாட்டு அமைப்புகள் வரை பற்பல பொருட்களின் உற்பத்திக்கு அரிய வகை கனிமங்கள் இன்றியமையாதவை.
உலகின் மொத்த அரிய கனிம உற்பத்தியில் 60 சதவீதத்தை சீனாவிடம் உள்ளது. மேலும் உலகின் அரிய வகை கனிமங்களின் விநியோகத்தில் 90 சதவீதத்த்துக்கும் மேல் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பரஸ்பர வரிவிதிப்பைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஏழு அரிய வகை கனிம ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடுகள் விதித்த சீன அரசு, கடந்த அக்டோபரில் மேலும் ஐந்து கனிமங்களுக்கும் கட்டுப்பாடுகளை விதித்தன. சொல்லப் போனால் மூலப்பொருட்கள் ஏற்றுமதிக்குத் தடை என்பதையும் தாண்டி முதன்முறையாக, சீனாவுக்கு வெளியே உள்ள உற்பத்தியாளர்களுக்கும் தனது ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளைச் சீனா விரிவுபடுத்தியது.
கடந்த நவம்பர் மாதம் தைவான் தொடர்பான ஜப்பான் பிரதமர் சனே டகாயிச்சியின் கருத்துக்களைத் தொடர்ந்து ஜப்பானுக்கான முக்கியத்துவம் வாய்ந்த அரிய மண் மற்றும் கனிமங்களின் ஏற்றுமதிக்கு கடுமையான கட்டுப்பாடுகளைக் ஜனவரி முதல் சீனா கொண்டு வந்தது.
தொடர்ந்து கடந்த பிப்ரவரியில் ஜப்பானின் முக்கிய தொழில் நிறுவனங்களைக் குறிவைத்து இரண்டு முறை கூடுதல் கட்டுப்பாடுகளைச் சீனா விதித்தது.
குறிப்பாக கடந்த ஜூன் மாதத்தில் ஜப்பானுக்கு காலியம் (gallium), டிஸ்ப்ரோசியம் (dysprosium), டெர்பியம் (terbium) மற்றும் இட்ரியம் (yttrium) போன்ற முக்கிய பொருட்கள் எதையும் சீனா ஏற்றுமதி செய்யவில்லை.
மின்சார வாகனங்கள், குறைக்கடத்திகள், விண்வெளி, ரோபோட்டிக்ஸ் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களில் பயன்படுத்தப்படும் அரிய மண் மூலப்பொருட்களுக்குப் பெருமளவில் சீன விநியோகத்தையே சார்ந்திருக்கும் ஜப்பானுக்கு இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவிலிருந்து மூலப் பொருட்கள் கிடைக்காததால் ஜப்பானின் மின்னணுவியல் துறை மட்டுமின்றி வாகன, இயந்திர மற்றும் எரிசக்தித் துறைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஜப்பானுக்கு மட்டுமின்றி அமெரிக்காவுக்கான இட்ரியம் (yttrium) ஏற்றுமதியையும், சீனா முழுமையாக நிறுத்தியுள்ளது.
2022 மற்றும் 2024-க்கு இடையில் மாதந்தோறும் சராசரியான 586 டன்கள் அரிய வகை காந்தங்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்து வந்த சீனா, இந்த ஆண்டின் முதல் பாதியில் மாதந்தோறும் சராசரியாக 479 டன் அரிய வகை காந்தங்களை அமெரிக்காவுக்குச் சீனா ஏற்றுமதி செய்துள்ளது. இது சராசரி அளவை விட சுமார் 20 சதவீதம் குறைவாகும்.
கடந்த அக்டோபரில் சீனாவுக்குச் சென்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங்க் உடன் செய்த ஒப்பந்தத்தை சீனா துளியும் மதிக்கவும் இல்லை; பின்பற்றவும் இல்லை என்பதையே இது காட்டுவதாக கூறப் படுகிறது. இது குறித்து பேசிய அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர் அரிய வகை காந்த ஏற்றுமதிகளில் சீனா ஒப்புக்கொண்டபடி முழுமையாக நடந்து கொள்ளவில்லை என்று கூறியுள்ளார்.
சீனாவுக்கு மாற்றாக அமெரிக்கா, ஜப்பான் மற்றும் பல மேற்கத்திய நட்பு நாடுகள், மாற்றுச் சுரங்கம், சுத்திகரிப்பு மற்றும் காந்த உற்பத்தித் திறன்களை மேம்படுத்துவதற்காக பல பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்துவந்தாலும் அவையெல்லாம் பயன்பாட்டுக்கு வர இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் அரிய வகை கனிமங்கள் மீதான தனது ஆதிக்கத்தை ஒரு புவிசார் அரசியல் ஆயுதமாக பயன்படுத்துவதை சீனா அதிகரித்து வருவதையே அந்நாட்டு சுங்கத் துறைதரவுகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
















