உத்தரகாண்டில் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்ற நிகழ்ச்சி மேடையில் சுத்திகரிப்பு சடங்கு நடத்தப்பட்ட தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா உறுதியளித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரின் நிறைவு நாளில், மாநிலங்களவையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, உத்தரகாண்ட்டின் ராம்லீலா மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோது எந்த ஒரு சமூகத்தின் பெயரையோ, மதத்தின் பெயரையையோ குறிப்பிடவில்லை என்றும், அரசின் பிரச்னைகள் குறித்து மட்டுமே பேசியதாகவும் தெரிவித்தார்.
ஆனால், தனது பேச்சுக்கு பிறகு ஸ்ரீ ராம் சேனா தர்மார்த்த சேவா நியாஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் அங்கு சுத்திகரிப்பு சடங்கு நடத்தி மேடையை சுத்தப்படுத்தியாகவும் கூறினார். இதுதான் ஜனநாயகத்தின் வழியா என கார்கே கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா, எதிர்க்கட்சி தலைவர் கார்கே கூறியது மிகவும் வருத்தமளிக்கிறது என தெரிவித்தார். இது காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல, நம் அனைவருக்குமே வருத்தம் அளிக்கும் விஷயம் என்றும், இதுபோன்ற செயல்களை பாஜக ஒருபோதும் ஆதரிக்காது எனவும் அவர் கூறினார். மேடை சுத்தப்பட்ட விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என ஜெ.பி.நட்டா உறுதியளித்தார்.
இதனை தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவையை தேதி குறிப்பிடாமல் அவை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஒத்திவைத்தார்.
















