நாடு முழுவதும் 80வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர்கள் மூவண்ணக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில், 80-வது சுதந்திர தின விழா கோலாகலமாக நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பிரதாப் தேசியக் கொடியேற்றி, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து, சுமார் 14 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதுடன், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
காஞ்சிபுரத்தில் 80-வது சுதந்திர தின விழாவையொட்டி, மாவட்ட ஆட்சியர் சினேகா தேசியக் கொடியேற்றி, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து, 93 பயனாளிகளுக்கு 1.52 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கியதுடன், சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கினார்.
இதே போல், சிவகங்கையில் 80-வது சுதந்திர தின விழாவையொட்டி, மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தேசியக் கொடியேற்றி, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து, சமாதானப் புறாக்கள் மற்றும் மூவண்ண பலூன்களை பறக்கவிட்டார். இதனையடுத்து, 8 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களையும் வழங்கினார்.
நெல்லையில் 80-வது சுதந்திர தின விழா கோலாகலமாக நடைபெற்றது. பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் தேசியக் கொடியை ஏற்றிய ஆட்சியர் ஆனந்த் மோகன், காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். தொடர்ந்து, 30 பயனாளிகளுக்கு 83 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் பத்மஜா கொடியை ஏற்றும் நேரத்தில், காவல்துறை அதிகாரி கொடியை அவிழ்த்ததால் பூக்கள் கீழே கொட்டின. இதனால் கொடியேற்றுவதை நிறுத்திய ஆட்சியர், பின்னர் கொடியை விரைவாக ஏற்றி மரியாதை செலுத்தினார்.
















