நக்சல் மனநிலை கொண்டவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்த வேண்டும் என்று சுதந்திர தின உரை மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
பல ஆண்டுகளாக, மாவோயிச மனநிலை கொண்டவர்கள், நாட்டின் அதிகார மையங்களில் ஆழமாக வேரூன்றி இருந்ததாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
அரசுக்கு ஆலோசனை வழங்கும் குழுக்களில் அவர்கள் இடம்பெற்றிருந்ததால், அரசு முடிவுகளை மாவோயிசக் கொள்கை பாதித்ததாக வேதனை தெரிவித்தார்.
காடுகளில் ஆயுதம் ஏந்திய நக்சலைட்டுகளை ஒழிப்பதிலும், அந்த நெருக்கடியிலிருந்து நாட்டை விடுவிப்பதிலும் நாம் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்த பிரதமர் மோடி,
இருந்தாலும் நக்சல் எண்ணம் கொண்டவர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்றும், வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள் என்றும் கூறினார்.
வன்முறைக்கும் பிளவுக்கும் வழிவகுத்து, சமூகத்தை தவறான பாதையில் இட்டுச் செல்ல, அவர்கள் பல்வேறு உத்திகளைக் கையாள்வதாக குற்றம் சாட்டிய பிரதமர் மோடி,இத்தகைய நக்சலைட்டுகளை நாம் அடையாளம் காண வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
நக்சல் மனநிலை கொண்டவர்களை தனிமைப்படுத்தி, நாட்டை ஒரு வளர்ந்த நாடாக மாற்ற இளைஞர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி தனது உரையில் கேட்டுக் கொண்டார்.
















