பழனி கோயிலுக்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான நில மோசடி வழக்கில், முன்னாள் இணை ஆணையர் உள்ளிட்ட நால்வரிடம் சிபிசிஐடி போலீசார் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
கோயில் கண்காணிப்பாளர் அளித்த புகாரின் பேரில், சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், போலி அறக்கட்டளையைச் சேர்ந்த முருகதாஸ் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு கடந்த 15-ம் தேதி சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, பழனி கோயிலின் முன்னாள் இணை ஆணையர் மாரிமுத்து, ஓய்வுபெற்ற வட்டாட்சியர் மாரியப்பன், ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் சின்னசாமி மற்றும் அறநிலையத்துறை ஆய்வாளர் சிவனேசன் ஆகியோரிடம் திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. மேலும், முன்னாள் இணை ஆணையர் மாரிமுத்துவிடம் மீண்டும் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
















