கர்நாடகாவில் காவலர் தேர்வு மையத்தில் வினாத்தாள் எண்ணில் குளறுபடி எனக்கூறி தேர்வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது.
கர்நாடக மாநிலம், விஜயபுரா மாவட்டம், டிகோடா பகுதியில் உள்ள சரதாம்பா பியூ கல்லூரியில் காவலர் பணிக்கான தேர்வு நடைபெற்றது. தேர்வு மையத்தில் வழங்கிய ஓஎம்ஆர் விடைத்தாளில் இருந்த எண் மற்றும் வினாத்தாளில் இருந்த எண் பொருந்தவில்லை என கூறி சில மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, தேர்வை புறக்கணித்து நூற்றுக்கணக்கான தேர்வர்கள் மையத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மறுதேர்வு நடத்த கோரி முழக்கங்களை எழுப்பியவாறு தேர்வு மையத்திற்குள் நுழைய முற்பட்டனர். அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் தேர்வர்களை தடுத்து நிறுத்தியதால் இருதரப்பினருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
இது குறித்து கர்நாடக தேர்வுகள் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. அதில், அதிகாரப்பூர்வ அறிவிப்புகள், வாய்மொழி அறிவுறுத்தல்களில் ஓஎம்ஆர் எண் மற்றும் வினாத்தாள் எண் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஓஎம்ஆர் தாளில் வினாத்தாள் தொடர் குறியீடு மற்றும் பதிப்பு குறியீட்டை பதிவு செய்யும் வசதி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
















