பிரதமர் மோடியின் ஃபேஸ்புக் பதிவு தவறுதலாக நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, மெட்டா நிறுவனம் புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. இதையடுத்து, அந்நிறுவனத்தின் மீதான மத்திய அரசின் கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
நீட் வினாத்தாள் கசிவு தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும், வினாத்தாள் கசிவால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் பல கோரிக்கைகளை முன் வைத்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த ஜூன் மாதம் முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் மாணவர்கள் போராட்டம் தொடர்பாக பிரதமர் மோடி இரண்டு செல்ஃபி வீடியோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதை தனது பேஸ்புக் பக்கத்திலும் பகிர்ந்திருந்தார்.
முதலில் கடந்த ஜூலை 23ம் தேதி இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டு பின்னர் ஃபேஸ்புக்கிலும் பகிரப்பட்ட அந்தப் பதிவு இளைஞர்களை நோக்கிய பிரதமர் மோடியின் முதல் நேரடி ‘செல்ஃபி’ வீடியோவாக அமைந்திருந்தது. அவற்றில் ஒரு வீடியோ திடீரென நீக்கப்பட்டதால் சர்ச்சை எழுந்தது.
உடனடியாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில் மெட்டா நிறுவனத்தின் உலகளாவியப் பொதுக் கொள்கைத் தலைவருக்குச் சம்மன் அனுப்பப்பட்டது. இந்தியாவில் உள்ள முக்கியப் தலைவர்கள் மற்றும் பிரமுகர்களின் கணக்குகள் தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடக்கக்கூடாது என்றும் உறுதி அளிக்குமாறு மெட்டாவிடம் மத்திய அரசு உரிய விளக்கம் கேட்கப்பட்டது.
பிரதமர் மோடியின் ஃபேஸ்புக் வீடியோ பதிவு தற்காலிகமாக நீக்கப்பட்டதற்குத் தங்களின் தானியங்கி AI-சார்ந்த உள்ளடக்கக் கண்காணிப்பு அமைப்புகளே (automated AI-based moderation systems) காரணம் என்றும், பிரதமரின் பதிவு தவறுதலாக நீக்கப்பட்டதாக ஒப்புக் கொண்ட மெட்டா நிறுவனம் அதற்கான விளக்கம் அளித்து மன்னிப்பும் கேட்டுள்ளது.
முக்கியப் பிரமுகர்களின் கணக்குகளில் பதிவிடப்படும் உள்ளடக்கங்களுக்கான உள் ஆய்வு நடைமுறைகளை வலுப்படுத்தி வருவதாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திடம் மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
தானியங்கி அமைப்புகளை மட்டுமே நம்பியிருக்காமல், இனி முக்கியத் தலைவர்கள் மற்றும் பிரபலங்களில் கணக்குகள் தொடர்பான உள்ளடக்கங்கள் கூடுதல் மனித மேற்பார்வைக்கு உட்படுத்தப்படும் என்றும் எந்தவொரு முடிவும் இறுதி செய்யப்படுவதற்கு முன், மூத்த அதிகாரிகளின் பார்வைக்கும் ஆய்வுக்கும் உட்படுத்தப்படும் என்றும் மெட்டா கூறியுள்ளது.
மெட்டாவின் விளக்கங்களால் மத்திய அரசு முழு திருப்தி அடையவில்லை என்று கூறப்படும் நிலையில் இவ்விவகாரம் இன்னும் பரிசீலனையில் இருப்பதாகவும், நிறுவனத்தின் ஆரம்பக்கட்ட பதிலால் இந்தப் பிரச்சனை முடிவுக்கு வந்துவிடவில்லை என்றும் மத்திய அரசின் உயர் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக அதிகமாக விவாதிக்க வேண்டி இருப்பதால், ஒருவாரத்துக்குள் மெட்டா நிறுவனப் பிரதிநிதிகள் நேரில் ஆஜராகும்படி, அந்நிறுவனத்துக்கு மத்திய அரசு கண்டிப்புடன் கூறியுள்ளது.
எனவே இந்த விவகாரம் குறித்து விரிவாக விவாதிக்கவும், நிறுவனத்தின் திருத்தப்பட்ட அணுகுமுறையை விளக்கவும் மெட்டா நிறுவனப் பிரதிநிதிகள் ஒரு வாரத்துக்குள் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக அதிகாரிகளைச் சந்திப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு தவறு நிகழ்ந்ததை மெட்டா ஒப்புக்கொண்டதை அரசு பாராட்டுவதாகவும், அதேவேளையில் இந்தச் சம்பவத்திற்கு இட்டுச் சென்ற சூழல் குறித்த விரிவான விளக்கத்தை எதிர்பார்ப்பதாகவும் தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலாளர் எஸ். கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
















